எத்தனை நாடகம் நடத்தினாலும் நற்றமிழ் பூமி நம்பாது: மேகதாது விஷயத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் அ.தி.மு.க. நாளேடு தாக்கு


எத்தனை நாடகம் நடத்தினாலும் நற்றமிழ் பூமி நம்பாது: மேகதாது விஷயத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் அ.தி.மு.க. நாளேடு தாக்கு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 7 Dec 2018 8:54 PM GMT)

மேகதாது விஷயத்தில் மு.க.ஸ்டாலின் காங்கிரசுடன் சேர்த்து இரட்டை வேடம் போடுவதாகவும், தி.மு.க. எத்தனை நாடகம் நடத்தினாலும் நற்றமிழ் பூமி நம்பாது என்றும் அ.தி.மு.க. நாளேடு கூறியுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில் குத்தீட்டி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு கரைபுரள விடமாட்டோம் என கங்கணம் கட்டி செயல்படுவது கர்நாடகத்தை ஆளுகிற காங்கிரஸ் கூட்டணி அரசு என்றிருக்க, அந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டே, மேகதாதுக்கு எதிராகப் போராட்டம் என்று தி.மு.க. நடத்துவது பித்தலாட்டத்தின் உச்சமல்லவா?. இப்படித்தான், இத்தாலி காங்கிரசோடு அன்றும் இணை பிரியாமல், மத்தியிலே கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டு, ஈழத்து இன அழிப்பை முன்னின்று நடத்துவதற்கு துணை போன தி.மு.க. மொத்தத்தையும் முடித்து விட்டு தமிழினத்தை ஏமாற்ற அண்ணாவின் கல்லறையை, உண்ணா நோன்பு நாடகம் நடத்தும் மேடையாக்கி, உலகமே சிரிக்க மோசடி கூத்து நடத்தியது.

அவ்வழியிலேயே இப்போதும் தமிழின துரோக காங்கிரசோடு கூட்டணியை தொடர்ந்து கொண்டே, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்றும் தரங்கெட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். நாடாளுமன்றத்திலே சிறு, குறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பதாக வாக்களித்து விட்டு தமிழகத்து வணிகர்களை ஏமாற்ற இங்கே வந்து, வால்மார்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.

அது போலவே, பொன் விளையும் பூமியை புல்லும் முளைக்காத பாலைவனமாக்கவும், விளைநிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கும் விபரீதங்கள் நிகழ்த்தவும், அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் அணி வகுத்த மீத்தேன், கெயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரு பக்கம் ஒப்பந்த கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு, மறுபக்கம் மீத்தேனுக்கு எதிர்ப்பு என்று கனிமொழியை அனுப்பி கண்டன கடிதம் கொடுப்பதுமாக, காலமெல்லாம் தி.மு.க. ஆடி வரும் மோசடி கூத்தில் மேலும் ஒன்றாகவே அமைகிறது மேகதாதுவுக்கு எதிராக தி.மு.க.வின் அனைத்துக்கட்சிக் கூட்டமும், ஆர்ப்பாட்டமும்.

மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டினால், அந்த காங்கிரஸ் கட்சியோடு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஒரு வார்த்தை பேசுவதற்கு துப்பில்லாத தி.மு.க. இன்னும் எத்தனை நாடகங்கள் நடத்தினாலும், நற்றமிழ் பூமி அதனை ஒரு நாளும் நம்பாது.

காரணம்... காவிரி கன்னடர்க்கு, கச்சத்தீவு சிங்களர்க்கு... முல்லையாறு கேரளர்க்கு... முள்ளிவாய்க்கால் மட்டுமே தமிழர்க்கு என்று இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த துரோக இயக்கம் தி.மு.க. என்பதை ஒவ்வொரு தமிழனும் உதிரத்தில் அல்லவா எழுதி வைத்துள்ளான். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story