நாளுக்கு நாள் குறைந்து வருகிறது: தமிழகத்தில் 6,895 பேருக்கு கொரோனா


நாளுக்கு நாள் குறைந்து வருகிறது: தமிழகத்தில் 6,895 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Jun 2021 10:28 PM GMT (Updated: 22 Jun 2021 10:28 PM GMT)

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 6,895 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்றைய பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,914 ஆண்கள், 2,981 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 895 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவரும், 12 வயதுக்கு உட்பட்ட 219 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,070 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 870 பேரும், ஈரோட்டில் 741 பேரும், சேலத்தில் 485 பேரும், சென்னையில் 410 பேரும், திருப்பூரில் 434 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 33 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 28 மாவட்டங்களில் 200-க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

3.5 லட்சம் முதியவர்கள் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 84 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 207 ஆண்களும், 10 லட்சத்து 11 ஆயிரத்து 574 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 36 ஆயிரத்து 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 88 ஆயிரத்து 167 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 51 ஆயிரத்து 80 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

194 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 136 பேரும், தனியார் மருத்துவமனையில் 58 பேரும் என 194 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 24 பேரும், கோவையில் 19 பேரும், சேலத்தில் 23 பேரும், திருப்பூரில் 13 பேரும் உள்பட நேற்று மட்டும் 34 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 41 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 31 ஆயிரத்து 580 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

13,156 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் மருத்துவமனைகளில் நேற்று 37 ஆயிரத்து 178 ஆக்சிஜன் படுக்கைகள், 27 ஆயிரத்து 118 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 4 ஆயிரத்து 888 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 69 ஆயிரத்து 184 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 58 ஆயிரத்து 706 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து 13,156 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 23 லட்சத்து 48 ஆயிரத்து 353 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 56 ஆயிரத்து 886 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story