‘நீட்’ தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிப்பு: 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


‘நீட்’ தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிப்பு: 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 5 Oct 2021 12:25 AM GMT (Updated: 5 Oct 2021 12:25 AM GMT)

‘நீட்’ தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என 12 மாநில முதல்-மந்திரி களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

12 முதல்-மந்திரிகளுக்கு கடிதம்

இதனையடுத்து தி.மு.க. ஆட்சி அமைந்ததும், இந்த தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும் தமிழக சட்டசபையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே ‘நீட்’ தேர்வு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆந்திரா, சத்தீஷ்கார், டெல்லி, ஜார்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம், கோவா ஆகிய 12 மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சட்ட முன்வடிவு நகல்

கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களை பாதித்துள்ளதா? என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புகிறேன்.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளை செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை பரிந்துரைக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் “தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021” என்ற சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டமுன்வடிவின் நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன்.

அதிகார சமநிலை மீறல்

‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடாகும்.

இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையை தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும் என்று கருதுகிறோம்.

ஒருங்கிணைந்த முயற்சி

எனது கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் ஆவணங்களை ஆராய்ந்து, கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க மாநில முதல்-மந்திரிகள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் நான் எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. எம்.பி.க்கள் குழு

இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் குழு நேரில் சென்று வழங்கி, இப்பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவை கோர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story