“நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” : பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


“நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” : பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2022 11:27 AM GMT (Updated: 12 Jan 2022 11:27 AM GMT)

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன. 

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க இன்று பிரதமர் மோடி சென்னை வர இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் வாயிலாக இன்று மாலை திறந்து வைத்தார். மேலும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

முன்னதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின், “பல மாநிலங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களிலும் அரசுத் துறைகள் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை கொள்கை அடிப்படையாகும். மருத்துவத் துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும். 

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மாணவர் சேர்க்கை தொடர்பான இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும். தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story