போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் சோக முடிவு..!
![போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் சோக முடிவு..! போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் சோக முடிவு..!](https://media.dailythanthi.com/h-upload/2022/07/16/774764-covai.webp)
கோவையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட ஆயுதப்படை போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவை:
கோவை நகர ஆயுதப் படை போலீஸ்காரர் காளிமுத்து (வயது 29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள மேலத்துலுக்கன்குளம் ஆகும். இவர் சாலை தில்லை நாயகி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டார்
காளிமுத்து, கோவை காந்திபுரத்தில் அரசு பொருட்காட்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். ப்பாக்கி குண்டு அவரது வலது பக்க வயிற்றில் துளைத்து பின் வழியாக வெளியேறியது. அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் அருகில் உள்ள அரங்கில் இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த காளிமுத்துவ மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
துப்பாக்கி அவரது சிறுநீரகத்தைத் துளைத்து ரத்தம் அதிக அளவில் வெளியேறி இருந்தது. இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி காளிமுத்து இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் மனைவி சாலை தில்லைநாயகியிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் காளிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்தார்
போலீஸ் விசாரணையில் காளிமுத்து ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் ஆடியுள்ளார். ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தை இழந்த அவர், அதனை ரம்மி விளையாடி மீட்டு விடலாம் என்று தொடர்ந்து விளையாடி உள்ளார்.
இதற்காக தனது நண்பர்களிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி, பணத்தை இழந்துள்ளார். கடன் தொகையை தனது நண்பர்களுக்கு திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் போலீஸ்காரர் இதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.