டிரம்புக்கு, கிம் ஜாங் அன் கடிதம் அனுப்பினாரா? - வடகொரியா பதில்


டிரம்புக்கு, கிம் ஜாங் அன் கடிதம் அனுப்பினாரா? - வடகொரியா பதில்
x
தினத்தந்தி 21 April 2020 12:13 AM GMT (Updated: 21 April 2020 12:13 AM GMT)

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடிதம் அனுப்பினாரா என்பது குறித்து வடகொரியா பதிலளித்துள்ளது.

பியாங்யாங், 

அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 2 முறை நேரில் சந்தித்து பேசினர். ஆனால் இந்த 2 பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

வடகொரியா முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால் தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா முழுமையாக திரும்ப பெறும்வரை அணு ஆயுதங்களை கைவிட முடியாது என வடகொரியா கூறுகிறது. இதனால் அணு ஆயுத பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனிடையே உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையிலும், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, வடகொரியா விவகாரம் குறித்து ஜனாதிபதி டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் வடகொரியாவுடனான உறவு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னிடம் இருந்து தனக்கு அருமையான கடிதம் கிடைத்ததாக டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில், கிம் ஜாங் அன் தனக்கு கடிதம் எழுதியதாக டிரம்ப் கூறியதை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என வடகொரியா அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story