ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்


ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
x

ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சனா,

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது.

இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், செங்கடலில் ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான கப்பல் பிரேசிலில் இருந்து சோளம் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கப்பலுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Next Story