ரஞ்சி டிராபி அரையிறுதி; 2ம் நாள் முடிவில் மும்பை 207 ரன்கள் முன்னிலை


ரஞ்சி டிராபி அரையிறுதி; 2ம் நாள் முடிவில் மும்பை 207 ரன்கள் முன்னிலை
x

Image Courtesy: @BCCIdomestic

மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் சதம் அடித்து அசத்தினார்.

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி மும்பையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முடிவில் தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்டது. மும்பை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர் இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இதில் ஹர்திக் தாமோர் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து தாக்கூருடன் தனுஷ் கோட்யான் ஜோடி சேர்ந்தார். இவர் ஒரு புறம் நிதானமாக ஆட மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தாக்கூர் சதம் அடித்து அசத்தினார்.

சதம் அடித்த தாக்கூர் 109 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து துஷார் தேஷ்பாண்டே களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனுஷ் கோட்யான் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 100 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 353 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி தற்போது வரை 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மும்பை தரப்பில் தனுஷ் கோட்யான் 74 ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story