கோவிலுக்குள் படப்பிடிப்பு நடிகை ரவீனா தாண்டன் மீது போலீசில் புகார்

கோவிலுக்குள் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-03-08 22:30 GMT
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரவீனா தாண்டன். தமிழில் கமல்ஹாசன் ஜோடியாக ஆளவந்தான், அர்ஜுன் ஜோடியாக சாது ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜா கோவிலில் ரவீனா தாண்டன் நடித்த விளம்பர படமொன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது.

அழகு குறிப்புகள் குறித்து பேசி இதில் நடித்து இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லிங்கராஜா கோவிலுக்குள் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி இல்லை. கேமராவை உள்ளே கொண்டு செல்லவும் தடை உள்ளது. இந்த விதிமுறைகளை மீறி ரவீனா தாண்டன் கோவிலுக்குள் சென்று அழகு குறிப்பு விளம்பர படத்தில் நடித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

ரவீனா நடித்த காட்சிகளை ஒருவர் செல்போன் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதன்பிறகே கோவிலுக்குள் நடந்துள்ள படப்பிடிப்பு விவரம் வெளியே தெரியவந்தது. கோவில் புனிதத்தை ரவீனா தாண்டன் கெடுத்து விட்டதாகவும் எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியும் கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து ரவீனா தாண்டன் கூறும்போது, “கோவிலுக்குள் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்னுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். அப்போது ஒருவர் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் அழகு குறிப்புகளை சொன்னேன். அதை செல்போனில் படம்பிடித்து வெளியிட்டு விட்டார். விளம்பர படத்தில் நான் நடிக்கவில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்