கயிறு அறுந்து தலைகீழாக விழுந்த நடிகை நடாஷா ஆஸ்பத்திரியில் அனுமதி

பங்கி ஜம்பிங்-கில் கயிறு அறுந்து தலைகீழாக விழுந்த நடிகை நடாஷா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

Update: 2018-03-21 22:15 GMT
இந்தி படங்களில் நடித்துள்ளவர் நடாஷா சூரி. டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார். டி.வி தொடர்களிலும் நடித்து வருகிறார். நடாஷா சூரி சமீபத்தில் இந்தோனேஷியா சென்று இருந்தார். அங்கு கடை திறப்பு விழா நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் இடங்களை சுற்றிப்பார்க்க கிளம்பினார். உயரத்தில் தலை கீழாக தொங்கி சாகசம் செய்யும் பங்கி ஜம்பிங்கில் நடாஷாவுக்கு விருப்பம் உண்டு. அங்கு பங்கி ஜம்பிங்கில் அவர் கலந்து கொண்டார். உயரத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் அவர் தலைகீழாக தொங்கியபோது திடீரென்று கயிறு அறுந்தது.

இதனால் நடாஷா சூரி தலைகீழாக கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக ஆற்றில் அவர் விழுந்து விட்டார். விழுந்த வேகத்தில் பல அடி ஆழத்துக்குள் தண்ணீரில் தலைகீழாகவே சென்றார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மயக்கமானார். உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

24 மணி நேரத்துக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். தரையில் விழுந்து இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்