மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் கைது ஆவார்களா?

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் செய்த பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் தெலுங்கானா அரசுக்கும், மத்திய செய்தி ஒளிபரப்பு துறைக்கும் விளக்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2018-04-13 23:30 GMT
ஐதராபாத்,

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக தன்னை நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பாலியல் தொல்லை கொடுத்து வாழ்க்கையை நாசம் செய்ததாக புகார் கூறி போராடி வருகிறார்.

முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் அவர்கள் பெயர்களையும், புகைப்படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டு வருகிறார்.

இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்க கூடாது என்று தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். ஸ்ரீரெட்டிக்கு மகளிர் அமைப்புகளும் மாணவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தெலுங்கானா அரசுக்கும், மத்திய செய்தி ஒளிபரப்பு துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் அவருக்கு நடிக்க வாய்ப்பு அளிக்காமல் தடுப்பதும் தனி மனிதனின் உரிமையை பறிப்பதாகும். இதற்கு 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் திடீரென்று நீக்கியது. சங்கத்தில் உள்ள 900 ஆயிரம் உறுப்பினர்களும் ஸ்ரீரெட்டியுடன் நடிக்கலாம் என்று அறிவித்து உள்ளது.

பாலியல் புகார் குறித்து விசாரிக்க 20 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்று தெலுங்கு பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்ரீரெட்டி விவகாரம் சூடு பிடித்துள்ளது.

அவரது புகார் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து போலீஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாகவும் இதன்மூலம் ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் கைது செய்யப் படலாம் என்றும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்