எவரெஸ்ட் சிகரத்தில் நடிகை ஜோதிகா - ரசிகர்கள் வாழ்த்து

நடிகை ஜோதிகா தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-04-29 10:54 GMT

சென்னை,

90-களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அறிமுகமே அஜித்துடன் வாலி படத்தில்தான். அதில் சோனா என்ற சிறப்புத்தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முழுநீள ஹீரோயினானார். பின்னர் விஜய்யுடன் குஷி படத்தில் நடித்தார்.

பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா, கமலுடன் தெனாலி, வேட்டையாடு விளையாடு, ரஜினியுடன் சந்திரமுகி ஆகியப்படங்களிலும் நடித்தார். தனது முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோதிகாவுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா , பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ எண்ட்ரியானார். அதன் பிறகு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த  கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், நடிகை ஜோதிகா சுற்றுலா செல்லும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது இமயமலை மற்றும் எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்ற வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் டிரக்கிங் செல்வது, பனியில் நனைவது, வசதி இல்லாத சிறிய வீட்டில் தங்கி இருப்பது, அங்கு சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவது, மலை உச்சியில் இருக்கும் ஓட்டலில் சாப்பிடுவது, சிறிய ஹெலிகாப்டரில் பயணிப்பது, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உற்சாகத்தில் துள்ளி குதிப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

ஜோதிகாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்து கடந்த வருடம் வெளியான காதல் தி கோர் மலையாள படம் வரவேற்பை பெற்றது. அஜய்தேவ்கானுடன் நடித்த சைத்தான் இந்தி படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. தற்போது மேலும் 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்