வழக்கில் இருந்து முன்னாள் காதலரை விடுவிக்க நடிகை பிரீத்தி ஜிந்தா மறுப்பு

பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவருக்கும் தொழில் அதிபர் நெஸ் வாடியாவுக்கும் காதல் இருந்தது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

Update: 2018-09-18 23:00 GMT
2014–ம் ஆண்டு மே மாதம் 30–ந் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது நெஸ்வாடியா தன்னிடம் தகாத முறையில் நடந்ததாக பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் அளித்தார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நெஸ்வாடியாவுக்கு அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து விடுபட நெஸ்வாடியா முடிவு செய்து மீண்டும் கோர்ட்டை அணுகினார்.

பிரீத்தி ஜிந்தாவின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை கோர்ட்டில் அவர் மனுதாக்கல் செய்தார். வழக்கை ரத்து செய்வது குறித்து பதில் அளிக்கும்படி பிரீத்தி ஜிந்தாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று பிரீத்தி ஜிந்தா கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். இதன்மூலம் வழக்கை முடிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

நெஸ்வாடியா வழக்கறிஞர் கோர்ட்டில் கூறும்போது ‘‘பிரீத்தி ஜிந்தா வழக்கினால் நெஸ்வாடியா மன அழுத்தத்தில் இருக்கிறார். எனவேதான் இந்த வழக்கை முடித்து வைக்க கோருகிறோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்