ரூ.1.79 கோடி சம்பள பாக்கி: அரவிந்தசாமி, மனோபாலாவுக்கு கோர்ட்டு புது உத்தரவு

அரவிந்தசாமி-திரிஷா ஜோடியாக நடித்துள்ள சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலா தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது.

Update: 2018-09-21 23:15 GMT
 நடிகர் அரவிந்தசாமி சென்னை ஐகோர்ட்டில் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்தார். சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததில் தனக்கு ரூ.1.79 கோடி சம்பள பாக்கி உள்ளது என்றும், அதனை வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மனோபாலாவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனோபாலா பதில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘சதுரங்க வேட்டை–2 படத்தின் சம்பள பாக்கி பிரச்சினையை அரவிந்தசாமியுடன் சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். முதல் தவணையாக அரவிந்தசாமிக்கு அக்டோபர் 10–ந்தேதிக்குள் ரூ.25 லட்சத்தை கொடுத்து விட உறுதி அளிக்கிறேன். சதுரங்க வேட்டை–2 படத்தை கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் திரைக்கு கொண்டு வர மாட்டோம் என்று கோர்ட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பினரும் அக்டோபர் 12–ந்தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி உங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்