மீண்டும் பார்வையற்றவர் வேடத்தில் விக்ரம்?

நடிகர் விக்ரம் மீண்டும் கண் பார்வையற்றவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

Update: 2018-09-27 22:15 GMT
விக்ரம் நடித்த சாமி–2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் செல்வா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனை வைத்து தூங்காவனம் படத்தை டைரக்டு செய்தவர் ராஜேஷ் செல்வா. 

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விக்ரம் நடிக்க உள்ள படம் 2016–ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிய டோன்ட் ப்ரீத் என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் என்று பேசப்படுகிறது. பெடி அல்வரேஸ் இயக்கிய இந்த படத்தில் ஸ்டீபன் லாங், ஜேன் லெவி, டைலன் மின்னட் ஆகியோர் நடித்திருந்தனர், 

கண்பார்வை இல்லாத ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் வீட்டில் தனியாக வசிக்கிறார். அந்த வீட்டில் திருட கொள்ளையர்கள் திட்டமிடுகின்றனர். பார்வையுள்ள திடகாத்திரமான கொள்ளையர்களை பார்வையற்றவர் எப்படி எதிர்கொண்டு ஒவ்வொருவராக கொலை செய்கிறார் என்பது கதை. இதில் பார்வையற்றவராக ஸ்டீபன் லாங் நடித்து இருந்தார். 

இந்த படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து எடுப்பதாகவும், இதில் விக்ரம் கண்பார்வையற்றவராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. விக்ரம் ஏற்கனவே காசி, தாண்டவம் ஆகிய படங்களில் பார்வையற்றவராக நடித்து இருந்தார்.

மேலும் செய்திகள்