யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படத்தில் மதுவுக்கு எதிராக வைரமுத்து எழுதியுள்ள பாடல்

‘படிக்காத பக்கங்கள்’ படத்திற்காக வைரமுத்து மதுவுக்கு எதிராக எழுதியுள்ள பாடல் வரிகளை தற்போது அவர் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

Update: 2024-04-27 09:12 GMT

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்த படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில், படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுவுக்கு எதிரான பாடல் ஒன்று இன்று மாலை வெளியாகிறது.

கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மரணத்திற்கு முன்பே

மனிதனைப் புதைத்துவிடுகிறது

மது

ஒவ்வொரு மணி நேரத்திற்கும்

16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

44 முதல் 67 விழுக்காடு

சாலை விபத்துகள்

மதுவால் நேர்கின்றன

20மில்லி ரத்தத்தில் கலந்தாலே

பார்வையைப் பாதிக்கிறது மது

30மில்லி கலந்தால்

தசை தன் கட்டுப்பாட்டை

இழந்துவிடுகிறது

ஒருநாட்டின் மனிதவளம்

தவணைமுறையில் சாகிறது

ஒழுக்கக்கோடுகள் அழிந்து

ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்

மதுவுக்கு எதிராக

நான் எழுதிய ஒருபாடலை

இன்று மாலை வெளியிடுகிறோம்

இப்போதே உங்கள்

கண்களுக்கும் காதுகளுக்கும்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தனது எக்ஸ் தளத்தில் வைரமுத்து, "படிக்காத பக்கங்கள்" படத்துக்காக எழுதிய "சரக்கு பாடல்" எதற்காக எழுதப்பட்டது என்பது குறித்த விவரங்களை கவிதையாகவும் மதுவை குடிப்போருக்கு எச்சரிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்