டுவிட்டரில் தொடர் விமர்சனம் ;வெளியேறிய நடிகை சோனம் கபூர்

டுவிட்டரில் தொடர் விமர்சனங்களால் இந்தி திரைப்பட நடிகை சோனம் அகுஜா வெளியேறியுள்ளார்.

Update: 2018-10-06 12:07 GMT

மும்பை,

இந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனம் அகுஜா.  இவர் துல்கர் சல்மானுடன் ஜோயா பேக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலை தளங்களில் ஒன்றான டுவிட்டரில் இருந்து வெளியேறும் தனது முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார்.  சில காலங்களுக்கு ரசிகர்களுடன் உரையாடுவது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன்.  டுவிட்டர் மிக எதிர்மறையாக உள்ளது.  அனைவருக்கும் அமைதியும், அன்பும் ஏற்படட்டும் என தனது டுவிட்டர் செய்தியில் சோனம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் இருந்து வெளியேறும் முடிவிற்கான குறிப்பிடத்தக்க சம்பவம் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.  ஆனால், மும்பையில் சுற்று சூழல் சீர்கேடு பற்றி அவர் டுவிட்டரில் தெரிவித்த பதிவுக்கு எதிராக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவை அடுத்தே சோனம் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

அந்த டுவிட்டர் பதிவில் சோனம், நகரை அடைய எனக்கு 2 மணிநேரம் ஆனது.  ஆனாலும் சேர வேண்டிய இடத்தினை அடையவில்லை.  சாலைகள் மோசம் ஆக உள்ளன.  சுற்று சூழல் சீர்கேடு அதிகம் உள்ளது.  வீட்டை விட்டு வெளியே வருவது ஒரு கெட்ட கனவாக உள்ளது என பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நபர் ஒருவர் சோனம் பதிவில், பொது  போக்குவரத்து அல்லது குறைவான எரிபொருளை எடுத்து கொள்ளும் வாகனங்களை பயன்படுத்திடாத உங்களை போன்ற நபர்களாலேயே சுற்று சூழல் சீர்கேடு அளவு உயர்ந்து வருகிறது.

லிட்டர் ஒன்றுக்கு 3 அல்லது 4 கி.மீ. அளவுக்கே மைலேஜ் தரும் உங்களுடைய ஆடம்பர கார், உங்களுடைய வீட்டில் உள்ள 10 அல்லது 20 ஏ.சி.க்கள் ஆகியவையே உலக வெப்பமயம் ஆவதற்கு பொறுப்பு என்பது உங்களுக்கே தெரியும்.  முதலில் உங்களால் ஏற்படும் சுற்று சூழல் சீர்கேட்டை கட்டுப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

அந்த நபருக்கு சோனம் அளித்துள்ள பதில் பதிவில், உங்களை போன்ற நபர்களால் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தினாலேயே பெண்கள் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதற்கு கடினம் ஆக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்