திரைப்பட வர்த்தக சபை சமரச முயற்சி அர்ஜூன்–சுருதிஹரிகரனை சந்திக்க வைக்க ஏற்பாடு

நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Update: 2018-10-23 22:45 GMT
தமிழில் ’நிபுணன்’ கன்னடத்தில் ‘விஷ்வமய’ என்ற பெயர்களில் தயாராகி வெளிவந்த படங்களின் படப்பிடிப்பில் அர்ஜூன் இறுக்கி அணைத்து தனது உடலில் கைவிரல்களை உடலில் படர விட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.

அர்ஜூன் இதனை மறுத்து மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக அறிவித்து உள்ளார். சுருதிஹரிகரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அர்ஜூன் ரசிகர்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சுருதி ஹரிகரன் கூறினார்.

அர்ஜூன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா கூறும்போது, ‘‘சுருதிஹரிகரன் பணம் பறிக்கும் முடிவோடு பாலியல் புகார் கூறியுள்ளார்’’ என்றார். சுருதிஹரிகரனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்து உள்ளார். கன்னட நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது, ‘‘அர்ஜூன் சிறந்த நடிகர். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை’’ என்றார்.

இந்த நிலையில் சுருதிஹரிகரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெங்களூருவில் உள்ள கர்நாடக வர்த்தக சபை எதிரில் அர்ஜூன் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அர்ஜூனையும் ஹரிகரனையும் நேரில் சந்திக்க வைத்து பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக வர்த்தக சபை முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்