நடிகை சுருதி ஹரிகரனின் பாலியல் வழக்கை ரத்து செய்ய அர்ஜூன் மனு

நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Update: 2018-11-01 23:15 GMT
தமிழில் ‘நிபுணன்’ மற்றும் கன்னடத்தில் ‘விஸ்வமய’ ஆகிய பெயர்களில் தயாரான படத்தின் படப்பிடிப்பில் இந்த பாலியல் தொல்லை தனக்கு நேர்ந்ததாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

படத்துக்கான ஒத்திகையில் அர்ஜூன் தன்னை இறுக்கமாக அணைத்து கைவிரல்களை உடலில் பரவ விட்டார். அதில் தவறான நோக்கம் இருந்ததை உணர்ந்தேன் என்றும் கூறினார். இதை அர்ஜூன் மறுத்தார். இருவருக்கும் சமரசம் ஏற்படுத்த கன்னட திரைப்பட துறையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

சுருதி ஹரிகரன் மீது அர்ஜூன் ரூ.5 கோடி கேட்டு பெங்களூரு கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலடியாக சுருதி ஹரிகரனும் 2015–ல் தனியார் சொகுசு விடுதியில் அர்ஜூன் அத்துமீறி நடந்து தனது அறைக்கு வரும்படி தன்னை அழைத்ததாக பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் அர்ஜூன் மீது போலீசார் பாலியல் பலாத்கார முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணைக்கு வருமாறு அர்ஜூனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சுருதிஹரிகரன் புகார் மீது போலீசார் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அர்ஜூன் கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. 

மேலும் செய்திகள்