14 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்துக்காக ‘அபிராமி மெகா மால்’ இடிக்கப்படுகிறது

சென்னை புரசைவாக்கத்தில் திரையுலக அடையாளமாக இருந்து வரும் ‘அபிராமி மெகா மால்’ இடிக்கப்படுகிறது. அந்த இடத்தில், 14 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும் என்று தியேட்டர் அதிபர் அபிராமி ராமநாதன் கூறினார்.

Update: 2018-12-29 23:45 GMT
அபிராமி ராமநாதன் இதுபற்றி ஒரு பத்திரிகை குறிப்பு விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

1976–ம் ஆண்டில் சிவலிங்கம் செட்டியாரால் அபிராமி மற்றும் பால அபிராமி திரையரங்கம் கட்டப்பட்டது. அதன் வெற்றியை பார்த்து 1982–ல் அன்னை அபிராமி மற்றும் சக்தி அபிராமி ஆகிய திரையரங்குகள் கட்டப்பட்டன. அதன் பிறகு 2002–ம் ஆண்டில், அபிராமி மெகா மால் கட்டப்பட்டது. 2005–ல் அபிராமி 7 ஸ்டார், ரோபோ, பால அபிராமி, ஸ்ரீ அன்னை அபிராமி மற்றும் ஸ்வர்ண சக்தி அபிராமி என்ற பெயர்களுடன் முற்றிலும் நவீன வசதிகள் செய்யப்பட்டு, 7 நட்சத்திர திரையரங்கமாக மாற்றம் செய்யப்பட்டு, இயங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது டிஜிட்டல் சினிமா அதிகரித்து வருகிறது. மேலும் 1,000 இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளுக்கு அவ்வளவு வாய்ப்புகள் இல்லை என்பதால், அபிராமி மெகா மால் மற்றும் அபிராமி திரையரங்குகள் செயல்படுவதை வருகிற பிப்ரவரி 1–ந் தேதி முதல் நிறுத்தி விட்டு, மீண்டும் புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதில் முதல் 3 மாடிகள் திரையரங்குகள் உள்ளிட்ட வணிக வளாகம். அதன் மீது 11 மாடிகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களாக அமைக்கப்பட இருக்கிறது.

புதிய கட்டிடத்தில் உள்ள திரையரங்குகள் இந்தியாவிலேயே இல்லாத பல புதுமைகளுடன் அமைக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்