ரஜினிகாந்தின் புதிய படம் ‘நாற்காலி’?

‘பேட்ட’ படத்தையடுத்து ரஜினிகாந்தின் புதிய படத்துக்கு நாற்காலி என்று தலைப்பு வைக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

Update: 2019-01-07 23:45 GMT
ரஜினிகாந்த் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படத்தில் நடித்தார். இந்த படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தற்போது ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர் ஓரிரு தினங்களில் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் குதிப்பாரா? அல்லது தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் மீண்டும் அவர் நடிப்பது உறுதியாகி உள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துப் போனதால் அதை மேலும் மெருகூட்டும்படி கூறி இருந்தார். இப்போது திரைக்கதை முழு வடிவம் பெற்றுள்ளது. அந்த படத்தில் நடிக்க ரஜினி தயாராகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பை அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க திட்டமிட்டு உள்ளனர். 

முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், கத்தியில் விவசாயிகள் பிரச்சினைகளையும், சர்காரில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார். மற்ற படங்கள் வேறு கதைகளங்களில் இருந்தன. 

ரஜினி நடிக்க உள்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்றும் சாதாரண மனிதர் அரசியலுக்கு வந்து படிப்படியாக வளர்ந்து முதல் –அமைச்சர் நாற்காலியை பிடிப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் கசிந்துள்ளது. 

எனவே இந்த படத்துக்கு நாற்காலி என்று தலைப்பு வைக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. வேறு பெயர்களையும் பரிசீலிக்கின்றனர். இதர நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருப்பதும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் ரஜினிகாந்த் திட்டமாக உள்ளது. இதனால் கட்சி தொடங்குவதை அவர் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்