இசையும் பாடலும் யாருக்கு சொந்தம் ? இளையராஜாவை சாடிய தயாரிப்பாளர்

இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் எனவும், தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் எனவும் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-05 12:32 GMT

சென்னையில் நடந்த குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளரும் வினியோகஸ்தர் சங்க தலைவருமான கே.ராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கேச் சொந்தம். ஏனென்றால், கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி, அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர் தான் வாங்குகிறார். இயக்குநர் சொல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும். இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது. 10 ட்யூன் வாங்குவோம். சில நேரம் 25 ட்யூன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம். கொத்தனார் வீடு கட்டுகிறார். அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார். அவருக்கு கூலி கொடுத்து விடுகிறோம்.

கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம், நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ, அதேபோல, பாடல் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம். அவர் எங்களுக்கு வேலை செய்தார். அது யாராக இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது. எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம்.

அவர் ஒரு பெரிய இசைஞானி, அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது. பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம்" என்றார். 

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனையே, "எனது அனுமதி இல்லாமல் நான் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடக் கூடாது.." என ஆர்டர் போட்டவர் இளையராஜா.

இந்நிலையில், சமீபத்தில் தனது பாடல்களுக்கு காப்பி ரைட்ஸ் எனப்படும் காப்புரிமை வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரஜினியின் கூலி படத்தின் டைட்டில் டீசர், தனது டிஸ்கோ பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகவும் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல், ஒரு பாடலுக்கு வரிகளை விட இசை தான் முக்கியம் என இளையராஜா பேசியதும் சர்ச்சையானது.

இளையராஜாவை தயாரிப்பாளர் கே ராஜன் பகிரங்கமாக விமர்சித்துள்ளது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்