பிரபுதேவா படத்துக்கு எதிராக அவதூறு; கொலைமிரட்டல் போலீஸ் கமிஷனரிடம் புகார்

‘சார்லி சாப்ளின்-2’ இந்த படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம், தயாரித்துள்ள டி.சிவா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Update: 2019-01-28 22:45 GMT
பிரபுதேவா நடித்துள்ள ‘சார்லி சாப்ளின்-2’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம், தயாரித்துள்ள டி.சிவா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

“பிரபுதேவா நடித்துள்ள சார்லி சாப்ளின்-2 படத்தை இயக்கி தயாரித்து வெளியிட்டுள்ளோம். இந்த படம் தமிழகம் உள்பட உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை யூ டியூப்பில் விமர்சனம் செய்யப்போவதாகவும் அதில் விளம்பரம் செய்வதற்கு பெரும் தொகை வேண்டும் என்றும் புளூசட்டை மாறன் என்பவர் வற்புறுத்தினார்.

நாங்கள் விளம்பரமோ பணமோ தர முடியாது என்று மறுத்து விட்டோம். இதனால் சார்லி சாப்ளின்-2 படத்தை தரக்குறைவான வகையிலும் ஒருமையிலும் பேசி விமர்சனம் செய்துள்ளார். இதனால் மன உளைச்சலும் அதிர்ச்சியும் அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இந்த விமர்சனத்தால் கோடிக்கணக்கில் முதலீடு செய்த அவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தனர். படக்குழுவினர் அனைவரையும் ஒருமையில் கேவலமாக பேசியதை வாபஸ் பெறவேண்டும் என்று புளூசட்டை மாறனிடம் ஷக்தி சிதம்பரம் தெரிவித்தபோது அவர் கொலை மிரட்டல் விடுத்து பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரது இணையதள பக்கத்தை முடக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்