ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

Update: 2019-01-30 23:30 GMT
ரஜினிகாந்த் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படத்தில் நடித்தார். இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் பார்த்துள்ளது. அடுத்து அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

சில மாதங்களாக திரைக்கதையை உருவாக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பை மார்ச் மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ச்சியாக 3 மாதங்கள் இதன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார். இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது.

இந்த படம் அரசியல் கதை என்றும், ‘நாற்காலி’ என்று படத்துக்கு பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. நாற்காலி என்ற பெயரை தேர்வு செய்யவில்லை என்று முருகதாஸ் மறுத்துள்ளார். முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், கத்தியில் விவசாயிகள் பிரச்சினைகளையும், சர்காரில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார்.

ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்பதும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் ரஜினிகாந்த் திட்டமாக உள்ளது. அதனால் கட்சி தொடங்குவதை அவர் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்