அண்ணா பல்கலைக்கழக ஆலோசகர் பணி நடிகர் அஜித்குமாருக்கு அழைப்பு

அண்ணா பல்கலைக்கழக ஆலோசகராக பணியாற்ற நடிகர் அஜித்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-01 23:30 GMT
நடிகர் அஜித்குமார் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் தக்ஷா என்ற மாணவர்கள் குழுவுடன் இணைந்து ஆளில்லா விமானம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். கடந்த 10 மாதங்களாக இந்த குழுவுக்கு ஆலோசகராகவும் ஆளில்லா விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் விமானியாகவும் பணியாற்றி வந்தார். 

அவசர காலத்தில் ஒருவரை சுமந்து செல்லும் வகையில் ஆளில்லா விமானத்தை வடிவமைத்தனர். இது ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. இதில் அஜித்குமாரை தொழில் நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் இரண்டாம் இடத்தை பிடித்தது. 

சமீபத்தில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் இந்த ஆளில்லா ஏர் டாக்சி விமானம் காட்சிக்கு வைக்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தற்போது இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான ஆய்வு மைய அமைப்பு அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. 

வரும் காலங்களில் விரும்பினால் மீண்டும் ஆலோசகராக கவுரவ பணியில் பணியாற்ற வேண்டும் என்றும் அஜித்குமாரை கேட்டுக்கொண்டு உள்ளது.

மேலும் செய்திகள்