சர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்

சர்ச்சை சுவரொட்டி தொடர்பாக, நடிகர் விஜய்சேதுபதி வருத்தம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-02-15 23:15 GMT


‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ என்ற பெயரில் தயாராகி உள்ள புதிய படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் படத்தை விளம்பரப்படுத்த ஆபாச வார்த்தைகளுடன் சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்த சுவரொட்டிகள் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. மேலும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. விஜய் சேதுபதியையும் சிலர் விமர்சித்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து விஜய் சேதுபதி கூறும்போது, “அந்த படத்தின் இயக்குனர் எங்களுடன் ‘பெண்’ நாடகத்தில் பணியாற்றினார். அதனால் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட சம்மதித்தேன். ஆனால் விளம்பரத்துக்காக இப்படி ஒரு சுவரொட்டி ஒட்டப்படும் என்று எனக்கு தெரியாது. இதனால் பலரின் மனது புண்பட்டு உள்ளது. இதற்காக இயக்குனரை அழைத்து கண்டித்தேன். இனிமேல் முதல் தோற்ற போஸ்டரை வெளியிடுவதையே நிறுத்தி விடலாம் என்று தோன்றுகிறது” என்றார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து படத்தின் இயக்குனர் ஆனந்தராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சுவரொட்டி ஒட்டியதற்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இல்லை. இந்த பிரச்சினைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்