“நடிக்கும்போது எனக்கு பயம் வருகிறது” -கீர்த்தி சுரேஷ்

ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எனக்கு பயம் வருகிறது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

Update: 2019-02-19 22:00 GMT
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் படங்கள் குவிகிறது. சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அவர் சொல்கிறார்:-

சினிமாவை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பார்கள், ஆனால் நடிகர்களுக்கு சினிமாதான் வாழ்க்கை, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு வாழ்க்கையை அனுபவிக்கிற மாதிரி நடிக்கிறோம். கதையை கேட்ட பிறகு கதாபாத்திரத்தில் முழுமையாக நடிக்க முடியுமா? முடியாதா? என்று பத்து முறை யோசிப்போம். ரசிகர்களுக்கு பிடிக்குமா என்றும் சிந்திப்போம்.

இப்படி கேள்விகளோடுதான் படங்களை தேர்வு செய்து எல்லா நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். மற்றவர்களை விட எனக்கு இந்த கேள்விகள் அதிகமாக எழும். இப்படி கேள்விகள் கேட்டு நடிப்பதால் எனக்கு நல்லதுதான் நடந்து இருக்கிறது. ஒரு சினிமாவில் நடிக்கும்போது ஒரு லட்சம் சந்தேகங்கள், பயங்கள் வந்தாலும் எல்லாவற்றுக்கும் இயக்குனரிடம் பதில் இருக்கும்.

ஆனாலும் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எனக்கு பயம் வருகிறது. அந்த பயம் எனக்கு நல்லதுதான் செய்கிறது. இதனால் நான் நடிக்கும் கதாபாத்திரத்தில் இன்னும் அக்கறை செலுத்த முடிகிறது.

சினிமா பயணம் ஒரு சஸ்பென்ஸ் கதை மாதிரி இருக்க வேண்டும். மகாநதி படம் செய்யும்போதும் பயந்து செய்தேன். ஆனால் வெற்றி கிடைத்தபோது அனுபவித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

மேலும் செய்திகள்