சர்ச்சை காட்சிகளில் நடித்த ஹன்சிகா, ஓவியாவை விசாரிக்க போலீசார் முடிவு?

சர்ச்சை காட்சிகளில் நடித்த நடிகை ஹன்சிகா, ஓவியாவை விசாரிக்க போலீசார் எடுத்துள்ள முடிவு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-03-06 23:00 GMT

சமீப காலமாக சர்ச்சை காட்சிகளுடன் வெளியாகும் படங்கள் எதிர்ப்பில் சிக்கி வருகின்றன. விஜய்யின் சர்கார் படத்தில் வரும் அரசின் இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு எதிராக போராட்டம் நடந்ததால் அதை நீக்கினர். தற்போது ஹன்சிகாவின் ‘மகா’, ஓவியாவின் ‘90 எம்.எல்’ படங்களும் பிரச்சினையில் சிக்கி உள்ளன.

‘மகா’ படத்தில் ஹன்சிகா காவி உடையில் பெண் சாமியாராக கஞ்சா புகைக்கும் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னணியில் காசி கோவில் இருந்தது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் இந்து மதத்தை அவமதிப்பதுபோல் உள்ளதாகவும், எனவே ஹன்சிகா உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் கோர்ட்டுக்கும் சென்றனர். ஹன்சிகாவுக்கு எதிரான புகார் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து கோர்ட்டில் தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுபோல் ஓவியா நடித்து திரைக்கு வந்துள்ள ‘90 எம்.எல்.’ படத்தில், பெண்கள் மது அருந்தி, புகைப்பிடிக்கும் காட்சிகளும் படுக்கை அறை காட்சிகளும் அதிகம் உள்ளது என்றும், எனவே ஓவியாவை கைது செய்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து ஹன்சிகா, ஓவியாவிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்