நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. திரையுலகினர் நேரில் வாழ்த்தினார்கள்.

Update: 2019-03-10 23:30 GMT
ஐதராபாத்,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் 2005-ல் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி பட்டியல், நான் கடவுள், மதராச பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் உள்பட பல படங் களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.

கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் மணப்பெண் தேடல் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அவரை திருமணம் செய்து கொள்ள 16 பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் யாரையும் மணமகளாக அவர் தேர்வு செய்யவில்லை. தொடர்ந்து பெற்றோர் அவருக்கு மணப்பெண் தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஆர்யாவுக்கும் பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார், சாயிரா பானுவின் பேத்தி சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில் வன மகன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தில் ஆர்யா “நானும் சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் உங்கள் அன்பும் ஆசியும் தேவை” என்று டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது. மெகந்தி மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஆதித்ய பஞ்சோளி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை அதே ஓட்டலில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகினர் மற்றும் உறவினர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.

மேலும் செய்திகள்