50 பேர் சேர்ந்து தயாரித்த படம்

50 நண்பர்கள் இணைந்து பணமுதலீடு செய்து ‘நெடுநல்வாடை’ என்ற படத்தை தயாரித்துள்ளனர்.

Update: 2019-03-11 22:00 GMT
‘நெடுநல்வாடை’  படத்தில் நாயகனாக இளங்கோ, நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளனர். பூ ராமு, அஜய் நட்ராஜ், மைம்கோபி, ஐந்து கோவிலான், செந்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை செல்வ கண்ணன் இயக்கி உள்ளார்.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் ஐந்து கோவிலன் பேசும்போது, “ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கும்போதே பிரச்சினை ஏற்படும் இந்த காலத்தில் 50 தயாரிப்பாளர்களுடன் இணைந்து எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த படத்தை செல்வகண்ணன் இயக்கி முடித்து இருப்பது சாதனை” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்த படத்தை வெளியிடுகிறார். அவர் பேசும்போது, “நண்பர்கள் இணைந்து நெடுநல்வாடை படத்தை தயாரித்து இருப்பது வியப்பாக உள்ளது. பல பிரச்சினைகளை மீறி மிகவும் தரமான படமாக தயாராகி உள்ளது. இந்த படம் உருவாக காரணமாக இருந்த 50 நண்பர்களுக்கும் படத்தின் இயக்குனர் வாழ்நாள் முழுக்க கடன்பட்டிருக்கிறார்” என்றார்.

செல்வகண்ணன் பேசும்போது, “இந்த படத்தை எப்போதோ கைவிட வேண்டியது. ஆனாலும் பிரச்சினைகளை மீறி நண்பர்கள் தொடர்ந்து உதவினார்கள் நல்ல படங்களை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு நெடுநல்வாடையை தரமான படமாக உருவாக்கி உள்ளோம்” என்றார். இந்த படத்துக்கு வைரமுத்து பாடல் எழுதி உள்ளார்.

மேலும் செய்திகள்