நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? நடிகர் அக்‌ஷய்குமார் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர், நடிகைகள் பலர் போட்டியிட உள்ளனர். தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட இருக்கிறார்கள்.

Update: 2019-03-19 23:45 GMT
பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் நடிகர்களுக்கு வலைவிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர் தேர்வுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்த பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக அவர் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்‌ஷய்குமாரும் சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலுக்கு அக்‌ஷய்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக தகவல் பரவி உள்ளது. அரசியலில் ஈடுபடுவது எனது நோக்கம் இல்லை. நான் இப்போது சினிமாவில் என்ன செய்துகொண்டு இருக்கிறேனோ அதையெல்லாம் அரசியலில் என்னால் செய்ய முடியாது” என்றார்.

இதன்மூலம் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்பதை அக்‌ஷய்குமார் தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்