பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் வகையில், புதிய படம் தயாராகி இருக்கிறது

Update: 2019-03-26 10:43 GMT

படத்துக்கு, ‘கருத்துக்களை பதிவு செய்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். உபாஷ்னாராய் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர், ராஜசேகர். டைரக்‌ஷன் பொறுப்பேற்றிருப்பவர், ராகுல். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

“இது, ஒரு திகில் படம். படத்தின் கரு, ‘பேஸ்புக்’ பற்றியதுதான். அதில் அறிமுகமாகி, நண்பர்களாக பழகி, காதலர்களாகி, பின்னர் அவனிடம் அவள் கற்பை இழக்கிறாள். அதோடு அவளை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடம் இருந்து தப்பி வந்த பெண், என்ன முடிவெடுக்கிறாள்? என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள்? என்பதே கதை.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை, ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தில் ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூகவலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”

மேலும் செய்திகள்