நடிகை சாய்பல்லவியுடன் 2-வது திருமணமா? - டைரக்டர் விஜய் விளக்கம்

நடிகை சாய்பல்லவியுடன் 2-வது திருமணமா என்பது குறித்து டைரக்டர் விஜய் விளக்கமளித்துள்ளார்.

Update: 2019-03-27 23:29 GMT

மதராச பட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான டைரக்டர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் ஒருவருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர்.

தற்போது வாட்ச்மேன், தேவி-2 ஆகிய படங்களை விஜய் இயக்கி வருகிறார். கங்கனா ரணாவத் நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படத்தையும் இயக்க தயாராகி உள்ளார். இந்த நிலையில் விஜய்க்கும், நடிகை சாய்பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.

சாய்பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர். விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. விஜய்க்கும், சாய்பல்லவிக்கும் ‘தியா’ படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவி உள்ளது.

இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறும்போது, “என்னையும், சாய்பல்லவியையும் இணைத்து வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. திருமணம் குறித்து நான் சிந்திக்கவில்லை. பட வேலைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்” என்றார்.

மேலும் செய்திகள்