விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்?

விஜய் படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-04-24 23:15 GMT
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு  சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது விஜய்யின் 63-வது படம் என்பதால் ‘தளபதி 63’ என்ற பெயரிலேயே படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

நயன்தாரா ஜோடியாக வருகிறார். கதிர், விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். அவரது அக்காள் கேரக்டரில் தேவதர்ஷினி நடிக்கிறார். இந்துஜா, ரெபா மோனிகா, ஜான், ஆத்மிகா, வர்ஷா பொல்லாம்மா உள்பட 11 நடிகைகள் கால்பந்து வீராங்கனைகளாக நடிக்கின்றனர்.

சென்னையில் கால்பந்து விளையாட்டு மைதானம் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு படத்துக்கு வெறித்தனம் என்று பெயர் வைத்து இருப்பதாக சமூக வளைத்தளத்தில் போஸ்டர் வைரலானது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண வந்தபோது இயக்குனர் அட்லி அலுவலகத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். இதைத்தொடர்ந்து விஜய் படத்தில் அவர் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் இதனை மறுத்தனர்.

தற்போது விஜய் படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு வில்லனாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்