மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்

மலையாள நடிகர்களுக்கு, நயன்தாராவைவிட சம்பளம் குறைவுதான் என நடிகர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-08 23:30 GMT

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாரா. 2 வருடங்களுக்கு முன்புவரை ரூ.1.5 கோடிக்கு குறைவாகவே வாங்கி வந்தார். ஆனால் கடந்த வருடம் அவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களும் வசூல் குவித்தன. கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான படங்களும் லாபம் பார்த்தன. இதனால் சம்பளத்தை ரூ.3 கோடி, ரூ.4 கோடி என்று உயர்த்திய அவர் இப்போது ரூ.5 கோடி கேட்பதாக தகவல். நயன்தாரா மலையாள நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்குவதாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார். இவர் தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிகாரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சீனிவாசன் அளித்த பேட்டி வருமாறு:-

“நடிகர்களை விட நடிகைகளுக்கு சம்பளம் குறைவு என்று பேசப்படுகிறது. கதாநாயகர்களுக்கும் பிற நடிகர்களுக்கும் நடிகைகளைவிட அதிக சம்பளம் கொடுப்பதாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இங்கு நயன்தாரா அளவுக்கு எத்தனை நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள்? மார்க்கெட்டை வைத்தே நடிகர்-நடிகைகள் சம்பளத்தை நிர்ணயிக்கின்றனர்.

சினிமாவில் பெண்கள் சுரண்டப்படுவதாக சொல்வது சரியல்ல. நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கி இருக்கிறார். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. நடிகையை கடத்த பல்சர் சுனிலுக்கு திலீப் ரூ.1.5 கோடி கொடுத்ததாக சொல்கிறார்கள். இதை நம்பமுடியாது. திலீப் அதற்காக ரூ.1.5 பைசா கூட செலவழித்து இருக்க மாட்டார்.” இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

மேலும் செய்திகள்