பாலியல் தொல்லையில் இருந்து தெலுங்கு நடிகைகளை பாதுகாக்க குழு

கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள நடிகைகள் இணைந்து தங்கள் பாதுகாப்புக்காக கேரள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை தொடங்கினார்கள்.

Update: 2019-05-28 00:06 GMT
இதில் நடிகைகள் மஞ்சுவாரியர், ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

தெலுங்கு நடிகர்களும், இயக்குனர்களும் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் சொல்லி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தெலுங்கு பட உலகிலும் நடிகைகள் பாதுகாப்புக்கு சங்கம் தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தெலுங்கு நடிகைகள் ‘பெண்களின் குரல்’ என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இதில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்துள்ளனர். இந்த அமைப்பு குறித்து நடிகை லட்சுமி மஞ்சு கூறும்போது, “தெலுங்கு சினிமாவில் உள்ள பெண்களின் நலனுக்காக தயாரிப்பாளர்கள் சுப்ரியா, சுவப்னா, நடிகை ஜான்சி, இயக்குனர் நந்தினி ஆகியோருடன் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கி உள்ளோம்” என்றார். தெலுங்கு திரையுலகில் பணியாற்றும் அனைத்து பெண்களின் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு பாடுபடும் என்றும் அவர் கூறினார்.

லட்சுமி மஞ்சு பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள். தமிழில் காற்றின் மொழி, கடல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்