“தரமான படங்களில் தொடர்ந்து நடிப்பேன்” - எஸ்.ஜே.சூர்யா

தரமான படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.

Update: 2019-05-28 23:19 GMT

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள மான்ஸ்டர் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டு பேசியதாவது:-

மான்ஸ்டர் படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள்.

என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன். இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்து இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

பாகுபலிக்கு பிறகு இந்த படத்துக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகளை குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குனரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார். இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, ஒரு படம் தயாராகி தடை இல்லாமல் வெளியாகும்வரை போராட்டம்தான். ஒரு நல்ல படம் தியேட்டருக்கு செல்வதில் சிரமம் இருக்கும். திரையரங்குகளும் குறைவாகவே கிடைக்கும். மான்ஸ்டர் படத்துக்கு அந்த சங்கடங்கள் இல்லை” என்றார்.

மேலும் செய்திகள்