விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் - டைரக்டர் செல்வராகவன்

விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் தொடங்க உள்ளதாக டைரக்டர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-28 23:30 GMT

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்த என்.ஜி.கே. படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் குறித்து செல்வராகவன் அளித்த பேட்டி வருமாறு:-

“நடுத்தர குடும்பத்து இளைஞன் அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும் கதை. நான் சூர்யா ரசிகன் என்பதால் அவரை நடிக்க வைத்தேன். எங்கள் இருவரின் கலவையாக இந்த படம் இருக்கும். எனது வழக்கமான படங்களை விட வித்தியாசமான கதையில் உருவாக்கி உள்ளேன்.

எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தும் படத்தில் இருக்கும். சாய் பல்லவியும், ரகுல் பிரீத்சிங்கும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சாய் பல்லவியின் பிரேமம் மலையாள படம் பார்த்து வியந்தேன். படப்பிடிப்பில் நான் கண்டிப்பாக இருப்பதாக பேசுகிறார்கள். மற்ற இயக்குனர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் சில கட்டுப்பாடுகள் வைத்து படப்பிடிப்பை நடத்துகிறேன்.

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க யோசித்தேன். ஆனால் தனுஷ் 2-ம் பாகம் எடுத்து சொதப்பி விடக்கூடாது என்று தயங்கியதால் முயற்சி கைவிடப்பட்டது. கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான கதை தயாராகி விட்டது. சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் இந்த படத்தில் பதிவு செய்யப்படும்.

அரசியல் தலைவர்களில் எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும். அவரது வாழ்க்கையை படமாக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வேன்.” இவ்வாறு செல்வராகவன் கூறினார்.

மேலும் செய்திகள்