விவசாயத்தை ஊக்குவிக்க நடிகர் கார்த்தி பரிசு

நடிகர் கார்த்தி படங்களில் நடிப்பதோடு விவசாயத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறார். விவசாயிகள் நலனுக்காகவும் குரல் கொடுக்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இயற்கை விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கினார்.

Update: 2019-07-08 00:52 GMT
விவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார்.

உழவன் அறக்கட்டளை அமைப்பை தொடங்கியது குறித்து கார்த்தி கூறும்போது, “விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் நமது நன்றி கடனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறேன். விவசாயிகளை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த அமைப்பு மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்” என்றார். தற்போது உழவன் அறக்கட்டளை மூலம் நடிகர் கார்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.

சிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறிஉள்ளார்.

கார்த்தி தற்போது கைதி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவுடன் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்