ராதாமோகன் டைரக்‌ஷனில் எஸ்.ஜே.சூர்யாவின் 15-வது படம்

விஜய் நடித்த ‘குஷி,’ அஜித் நடித்த ‘வாலி’ ஆகிய வெற்றி படங்களை டைரக்டு செய்த எஸ்.ஜே.சூர்யா, ‘நியூ,’ ‘கள்வனின் காதலி,’ ‘திருமகள்,’ ‘வியாபாரி, ‘இசை,’ ‘மான்ஸ்டர்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

Update: 2019-09-17 12:32 GMT
‘மெர்சல்’ படத்தில் வில்லனாக வந்து மிரட்டினார். அடுத்து அவர் ராதாமோகன் டைரக்‌ஷனில் உருவாகும் ஒரு புதிய படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 15-வது படம். இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

இது, சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திகில் படம். இதில் அவர் ‘பெயின்டர்’ ஆக நடிக்கிறார். அவருக்கு ஜோடி முடிவாகவில்லை. யுவன் சங்கர் ராஜா இசை யமைக்கிறார். ராதாமோகன் டைரக்டு செய்கிறார். அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி உள்பட இதுவரை 9 படங்களை இயக்கியிருக்கிறார். இது, அவர் டைரக்‌ஷனில் உருவாகும் 10-வது படம். ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க இருக்கிறது. சில முக்கிய காட்சிகளை பெங்களூரில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். படம், காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு வரும்.

எஸ்.ஜே.சூர்யா தற்போது, ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘இரவாக்காலம்,’ நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய 2 படங்களும் திரைக்கு வர தயாராக உள்ளன. 

மேலும் செய்திகள்