‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 2 வேடங்களில் ஐஸ்வர்யாராய்

‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-09-26 00:00 GMT
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் மற்றும் பார்த்திபன், ரகுமான், ஜெயராம், ஐஸ்வர்யாராய், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். 

மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர். பூங்குழலி வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நந்தினி கதாபாத்திரத்திலும், நந்தினியின் தாயான ஊமை ராணி மந்தாகினி வேடத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது கதாபாத்திரத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்காக நடிகர்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து 12 பாடல்களை எழுதுகிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தாய்லாந்து காடுகளில் 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்