ஆடம்பர திருமணத்தை வெறுக்கும் ராதிகா ஆப்தே

ஆடம்பர திருமணத்தை வெறுப்பதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-21 23:43 GMT

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வருகின்றன. அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்தனர். லண்டனை சேர்ந்த பெனடிக் டைலரை 2012-ல் பதிவு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எனது பாட்டியின் கிழிந்த புடவையைத்தான் கட்டிக்கொண்டேன். அதே மாதிரி திருமண வரவேற்புக்கு மட்டும் ஒரு டிரெஸ் எடுத்தேன். அதன் விலை வெறும் ரூ.10 ஆயிரம்தான். இப்போதெல்லாம் திருமண உடைகளுக்காகவே டிசைனர் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் செலவு செய்கிறார்கள். உடைகளுக்காக அதிகமாக செலவு செய்ய எனக்கு விருப்பம் கிடையாது. நமது நாட்டில் அளவுக்கு மீறி மிகவும் ஆடம்பரமாக பலரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கடன் வாங்கியும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்தை ஒரு விழா மாதிரி எடுக்கிறார்கள். அதற்கு பெரிய அளவில் செலவு செய்கிறார்கள். அதைப் பார்த்து நடுத்தர வர்க்கத்தினர் திருமணம் என்றாலே பயப்படுகிறார்கள்.

இந்த மாதிரி ஆடம்பரமாக திருமணங்களை நடத்த கூடாது. நான் பதிவு திருமணம் செய்து கொண்டாலும் அதிலும் இனிமையான அனுபவம் இருக்கிறது.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

மேலும் செய்திகள்