மீ டூவில் சிக்கிய வில்லன் நடிகர் மீது குற்றப்பத்திரிகை

தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Update: 2019-11-08 23:30 GMT
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். பா.ஜனதாவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமூக வலைத்தளத்தில் நிறம் மற்றும் சாதி தொடர்பான தாக்குதலுக்கும் உள்ளானார்.

இந்த நிலையில் பாலியல் புகாரிலும் சிக்கினார். கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி, விநாயகன் மீது மீ டூவில் பாலியல் புகார் தெரிவித்தார். அவர் கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் விநாயகனை அழைத்தேன். அப்போது போனில் தன்னிடம் ஆபாசமாக பேசினார். நான் மட்டுமன்றி எனது தாயும் அவர் விருப்பத்துக்கு இணங்க வேண்டுமென்றார் என்று கூறினார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. விநாயகன் மீது கல்பட்டா போலீசில் மிருதுளா தேவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் விநாயகன் மீது கல்பட்டா நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் குற்றத்தை விநாயகன் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் அடுத்த மாதம் நடக்கிறது.

மேலும் செய்திகள்