வருமான வரி சோதனையில் அரசியல்: விஜய்க்கு டைரக்டர் அமீர் ஆதரவு

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதில் அரசியல் பின்னணி இருப்பதாக சந்தேகம் எழுகிறது என்று டைரக்டர் அமீர் கூறியுள்ளார்.

Update: 2020-02-10 22:00 GMT
வருமான வரி அதிகாரிகள் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதற்கும், அவரது வீட்டில் சோதனை நடத்தியதற்கும் டைரக்டர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது ஆதாரத்தின் அடிப்படையிலா? அல்லது அரசியல் அச்சுறுத்தல் காரணத்தினாலா? என்ற சந்தேகம் உள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரி அதிகாரிகள் அவசர அவசரமாக அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.  

அதற்கான கால அவகாசம் கொடுத்து சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி இருக்கலாம். இதற்கு முன்பு நடந்த வருமான வரி சோதனைகளில் இருந்து பார்க்கும்போது விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதில் அரசியல் பின்னணி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. 

மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்திய செயல் கண்டிக்கத்தக்கது. எல்லா இடத்திலும் இதுபோல் போராட்டம் நடத்தினால் எந்த வேலையும் செய்ய முடியாது. இந்த பிரச்சினையில் விஜய் நினைத்து இருந்தால் தனது ரசிகர்களை பாதுகாப்புக்கு நிறுத்தி வைத்து இருக்கலாம். அது மோதலுக்கு வழிவகுத்திருக்கும். அப்படி செய்யாமல் முதிர்ச்சியாக நடந்து கொண்டது பாராட்டுக்குரியது.

விஜய்க்கு கொடுக்கும் அழுத்தங்கள் அவரை வளர்ச்சியடைவே வைக்கும்.’’

இவ்வாறு அமீர் கூறினார். 

மேலும் செய்திகள்