சினிமா துறையில் துரோகம் நடிகை தனுஸ்ரீ தத்தா வருத்தம்

இந்தி சினிமா உலகம் எனக்கு துரோகம் செய்து விட்டது என்று நடிகை தனுஸ்ரீ தத்தா கூறினார்.

Update: 2020-03-18 22:00 GMT
தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ஹார்ன் ஓகே ப்ளஸ் படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ தத்தா மீ டூ வில் புகார் கூறினார். நானா படேகரின் ஆட்கள் தன்னை தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. நானா படேகர் தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினியின் காலா படங்களில் நடித்துள்ளார். போலீசார் விசாரித்து நானா படேகருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்று வழக்கை முடித்தனர். இதனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நானா படேகரும், தனுஸ்ரீ தத்தா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறும்போது, “இந்தி சினிமா உலகம் எனக்கு துரோகம் செய்து விட்டது. நான் நீதி கிடைக்க போராடினேன். ஆனால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. இது அராஜகம் ஆகும். இந்த பிரச்சினையில் இந்தி பட உலகினர் எனக்கு உதவவில்லை. நீதி கிடைப்பதற்கு பதிலாக என்மீது வழக்குகள் தொடரப்பட்டன. எல்லோரும் என்னை கைவிட்டு விட்டனர். நிச்சயமாக இதை மறக்க மாட்டேன். இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வருவேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்