தயாரிப்பாளர்களுக்கு உதவ நாசர், டாப்சி சம்பளம் குறைப்பு

தயாரிப்பாளர்களுக்கு உதவ நடிகர் நாசர் மற்றும் நடிகை டாப்சி ஆகியோர் தங்கள் சம்பளத்தை குறைக்க உள்ளனர்.

Update: 2020-05-22 07:04 GMT

கொரோனா ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், திரைப்பட தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு உளளனர். தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடு கட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்து உள்ளார். இதுபோல் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், உதயா, அருள்தாஸ், நடிகை ஆர்த்தி ஆகியோரும் சம்பளத்தை குறைத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் நாசர், நடிகை டாப்சி ஆகியோரும் சம்பளத்தை குறைக்கின்றனர். ‘கபடதாரி’ படத்தில் நடிக்கும் நாசர், அந்த படத்துக்கான சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டு டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளார் என்று படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இதுபோல் நடிகை டாப்சி அளித்துள்ள பேட்டியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவுதற்காக சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். சினிமா துறை மீண்டும் சகஜ நிலை திரும்புவதற்காக சம்பளம் குறைக்கப்படுவதை தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்