கொரோனா ஊரடங்கில் சூர்யா படம் தணிக்கை

கொரோனா ஊரடங்கில் சூர்யா படம் தணிக்கை செய்யப்பட்டது.

Update: 2020-06-08 01:59 GMT

சூர்யாவின் ‘சூரரை போற்று‘ படபிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கினால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தினர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் சூரரை போற்று படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். தணிக்கையில் படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்து இருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கில் தணிக்கையான முதல் தமிழ் படம் இதுவாகும். சூரரை போற்று படம் ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கி உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படத்தை இணைய தளத்தில் வெளியிட்டதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யா படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் அறிவித்து உள்ளனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்