நடிகர், நடிகை, இயக்குனர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்தனை

முன்னாள் கதாநாயகன் மோகன் படங்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிக பாடல்கள் பாடி உள்ளார்.

Update: 2020-08-17 01:55 GMT

கொரோனா பாதிப்பினால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

முன்னாள் கதாநாயகன் மோகன் படங்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிக பாடல்கள் பாடி உள்ளார். மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் சினிமாவுக்கு வரும் முன்பே எஸ்.பி.பியின் ரசிகன். அவருடைய பாடல் களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். தமிழில், நான் நடித்த ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் ஜாக்கிங் செல்லும் போது வருகிற ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல், இன்று வரைக்கும் எல்லோருக்கும் பிடித்த பாடல். என்னுடைய ஆரம்பக் கால படங்களில் ‘ஜூலி ஐ லவ்யூ’ பாடலும் ‘இளையநிலா பொழிகிறதே’ உள்ளிட்ட ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் எல்லாப் பாடல்களும் என்று நிறைய பாடல்கள் பாடி உள்ளார். எஸ்.பி.பி.யின் பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை. அவர் பூரண நலம் பெற ஒரு ரசிகனாகப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவில், ‘’ஒன்றா இரண்டா? என் தமிழை அதிகம் கூவிய ஆண்குயில் பாடும் நிலா பாலு. விரைவில் அவர் மீளவும் காற்றை அவர் குரல் ஆளவும் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். நடிகர்கள் பிரபு, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, பிரசன்னா, விக்ரம் பிரபு, விவேக், விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், மித்ரனர் ஜவஹர், மனோபாலா, நடிகைகள் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், கங்கனா ரணாவத், ஐஸ்வர்யா ராஜேஷ், நிவேதா பெத்துராஜ், பிரனிதா, அம்மு உள்பட பலர் எஸ்.பி.பி குணமடைய பிரார்த்தனை செய்வதாக பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்