பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்

பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு உள்ளது.

Update: 2020-09-13 23:58 GMT
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள். இந்தியில் ஹவுஸ்புல், ஹே பேபி, ஹவுஸ்புல்-2, தர்னா ஸரூதி ஹேய் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் நடிகருமான சாஜித்கான் மீது ஏற்கனவே நடிகைகள் சலோனி சோப்ரா, ராச்சல் ஒயிட், சிம்ரன் சுரி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் செக்ஸ் புகார் கூறினர்.

இப்போது பிரபல மாடல் அழகியான டிம்பிள் பால் மீ டூவில் சாஜித்கான் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீ டூ இயக்கம் தொடங்கிய நேரத்தில் பலர் சாஜித்கான் பற்றி பேசினார்கள். அப்போது எனக்கு தைரியம் வரவில்லை. எனது குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டி இருந்தது. அதனால் அமைதி காத்தேன். இப்போது எனக்காக சம்பாதிப்பதால் எனது 17 வயதில் இயக்குனர் சாஜித்கான் என்னிடம் தவறாக நடந்ததை தைரியமாக சொல்கிறேன். அவருடைய ஹவுஸ்புல் படத்துக்கான நடிகர் தேர்வில் என்னிடம் ஆபாசமாக பேசி தொட முயன்றார். எனது ஆடைகளை கழற்ற சொன்னார். அது என்னை மிகவும் பாதித்தது. எத்தனையோ பெண்களை இப்படி செய்து இருப்பார். இவர் சிறையில் இருக்க வேண்டியவர்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் சாஜித்கானை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்