‘இரண்டாம் குத்து’ பட விவகாரம்: “பாரதிராஜாவை தாக்கி கருத்து வெளியிட்டதற்காக வருந்துகிறேன்” டைரக்டர் சந்தோஷ் ஜெயக்குமார் அறிக்கை
‘இரண்டாம் குத்து’ பட விவகாரம்: “பாரதிராஜாவை தாக்கி கருத்து வெளியிட்டதற்காக வருந்துகிறேன்” டைரக்டர் சந்தோஷ் ஜெயக்குமார் அறிக்கை
‘இரண்டாம் குத்து’ படத்தின் டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
‘இரண்டாம் குத்து’ படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீசருக்கு இயக்குனர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில் எனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு ‘டுவிட்’ போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம்? என்று தெரியாமல் செய்தது. அதற்கு பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்க கூடாது என்று மனம் கூறியது.
ஆகவே நான் போட்ட ‘டுவிட்டர்’ பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் பாரதிராஜா. அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்து விட மாட்டோமா... என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குனர்களுக்கு, இயக்குனர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். எப்போதும் இருப்பார்.
அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றியிருக்க கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் டைரக்டர் சந்தோஷ் ஜெயக்குமார் கூறியுள்ளார்.